திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் இன்று பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்லும் விமானத்தில் போதைப்பொருள் கடத்துவதாக கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதணையடுத்து பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.
அப்போது மன்னார்குடியை சேர்ந்த ஆரோக்கிய சாமி என்பவர் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ மெத்தாகுவாலோன் என்ற போதைப் பொருளை கடத்துவதற்காக, பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர், ஆரோக்கிய சாமியை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.