பூலாம்பட்டி கதவணையில் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

எடப்பாடி அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரிக் கதவணை நீர்த்தேக்கத்தில், கடந்த 70 நாட்களாக நிறுத்திவைக்கபட்டிருந்த விசைபடகு போக்குவரத்து திங்கள்கிழமை முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
பூலாம்பட்டி காவிரி கதவணைப்பகுதியில் விசைபடகு போக்குவரத்து நடைபெறும் காட்சி
பூலாம்பட்டி காவிரி கதவணைப்பகுதியில் விசைபடகு போக்குவரத்து நடைபெறும் காட்சி

எடப்பாடி: எடப்பாடி அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரிக் கதவணை நீர்த்தேக்கத்தில், கடந்த 70 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப்படகு போக்குவரத்து திங்கள்கிழமை முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

சேலம் மாவட்டம் பூலாம்பட்டி பகுதி மற்றும் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிபெட்டை ஆகிய இருமாவட்டங்களையும் இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. 

இவ்வணையின் ஒரு பகுதியில் நீர் மின் உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், இங்குள்ள நீர் பரப்பில், இருமாவட்டங்களையும் இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் வேறு மாற்று போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில், இந்நீர் வழிப்போக்குவரத்தினை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அரசு அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த இரு மாதங்களுக்கு முன், நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், பூலாம்பட்டிக் கதவணையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து கடந்த 70 நாள்களுக்கு மேலாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.  

அண்மையில் தமிழக அரசு பொது போக்குவரத்திற்கான விதிகளை தளர்வு செய்த நிலையில் பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்கத்தில் மீண்டும் விசைப்படகு போக்குவரத்து தொடங்கியது. கடந்த காலங்களில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் இந்த விசைப்படகு போக்குவரத்தினை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது விசைப்படகில் பயணம் செய்திடும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

பயணிகளிடையே நோய்த் தொற்று குறித்த அச்சம், நீண்டதூரப் பயணங்களுக்கு உரிய பேருந்து வசதியின்மை மற்றும் கல்வி நிலையங்களுக்கான தொடர் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பூலாம்பட்டி கதவணைப் பகுதியில் இயக்கப்படும் விசைப்படகில் மிக சொற்ப எண்ணிக்கையிலான பயணிகளே பயணம் செய்து வருகின்றனர்.

இவ்வாறு குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் விசைப்படகினை இயக்குவதால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், எரிபொருள், வேலையாட்கள் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு இடையே விசைப்படகினை தொடர்ந்து இயக்குவது, தங்களுக்கு பொருளாதார இழப்பினை ஏற்படுத்தி வருவதாக, விசைப்படகினை இயக்கும் தனியார் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com