ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்
தமிழக அரசின் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வரும் செப்டம்பர் இறுதி வரையிலும் தங்களுடைய இருப்புச் (வாழ்வுச்) சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக நேரிட்டுள்ள அசாதாரணமான சூழலைக் கருத்தில்கொண்டு, கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஓய்வூதியங்களைத் தொடர்ந்து பெற, வழக்கமாக, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காதவர்களை ஜூலை மாதத்தில் நேரில் அழைத்துப் பேசி, சான்றுகளைப் பெற்று உறுதி செய்து, ஓய்வூதியங்களை வழங்குவார்கள்.
கரோனா காரணத்தால் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்குப் பதிலாக, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாத இறுதி வரையில் சான்றுகளைச் சமர்ப்பிக்கலாம் என்றும் சமர்ப்பிக்காதவர்கள் அக்டோபரில் அழைக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசின் நிதித் துறை அரசாணையில் தெரிவித்துள்ளது.
அவகாசம் அளிக்கப்பட்ட காலத்திலும் உரிய சான்றுகளைச் சமர்ப்பிக்காதவர்களுக்கு நவம்பரிலிருந்து ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாணை விவரம்: பி.டி.எப். இணைப்பு