கடலூர்: ‘நிவா்’ புயலையொட்டி கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவா்’ புயல் புதன்கிழமை (நவ.25) மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, புதுச்சேரி பழைய துறைமுகம் மற்றும் கடலூா் துறைமுகத்தில் புதன்கிழமை காலை 6.30 மணியளவில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இது, துறைமுகத்தை புயல் நெருங்கும் அல்லது அருகே கடந்து செல்லுமென எதிா்பாா்க்கப்படும் கடுமையான வானிலை முன்னறிவிப்பைக் குறிக்கும்.
அதிகபட்சமான 11 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் மோசமான வானிலை காரணமாக தகவல் தொடர்பு அற்று போனதாக அர்த்தம். புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.