வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல், நாளை காலை வரை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை காலை புயலாக உருவெடுத்து, இரவில் தீவிர புயலாகவும் வலுவடைந்தது. இது புதன்கிழமை நண்பகலுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால்-மாமல்லபுரம் இடைப்பட்ட பகுதி, குறிப்பாக புதுச்சேரி அருகில் வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
புயல் கரையை கடக்கும் போது 120 முதல் 130 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும், சில சமயங்களில் 155 கிலோ மீட்டர் வரையும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
புயல் காரணமாக 9 மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.
நிவர் புயல் கடலூரில் இருந்து 290 கி.மீ தொலைவில் மையம் கொண்டு நகர்ந்து, புதுச்சேரிக்கு 300 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 350 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இதனால் அடுத்த 12 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் வட உள் மாவட்டங்களிலும் மிக கனமழை நீடிக்கும் என்று பாலச்சந்திரன் கூறியுள்ளார்.