மும்பை: மகாராஷ்டிரம் அரசு பொதுமருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மகாராஷ்டிரம் அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரம் மாநிலம், பண்டாரா அரசு பொதுமருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் இருந்த வார்டில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்.
உயிரிழந்த அனைத்து குழந்தைகளும் ஒரு மாதம் முதல் மூன்று மாதங்களுக்கும் இடைப்பட்ட குழந்தைகள்.
புதிததாக பிறந்த பத்து பச்சிளம் குழந்தைகள் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த தீ விபத்து குறித்து விசாரிக்க மகாராஷ்டிரம் முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்
முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மருத்துவமனையின் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் வேதனையாக உள்ளது. குழந்தைகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு தனது ஆழந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார் முதல்வர் உத்தவ் தாக்கரே.
மேலும், தீ விபத்து சம்பவம் குறித்து சுகாதார அமைச்சர் ராஜேஷுடன் பேசிய முதல்வர், விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்தி முழு அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளார்.
விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடமும் பேசிய முதல்வர், விரைந்து சென்று விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜேஷ், சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சம்பவ இடத்திற்கு வருவதாக கூறியுள்ளார்.