சத்தியமங்கலம் பகுதியில் விட்டு விட்டு பெய்த மழையால் பிரேக் பிடிக்காமல் வாகனங்கள் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
சத்தியமங்கலம் பகுதியில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
விபத்துக்குள்ளான மினி டெம்போ
இந்நிலையில், ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த மினி டெம்போ, அரியப்பம்பாளையம் எருமைபள்ளம் என்ற இடத்தில் எதிரே வந்த பைக் மீது மோதியதில் மழையின் காரணமாக மினி டெம்போ சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பைக்கில் வந்த பெருந்துறை விவசாயி கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மினி டெம்போவில் வந்த சிவக்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிவகுமாரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான தக்காளி பாரம் ஏற்றி வந்த டெம்போ.
விபத்து நடந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தக்காளி ஏற்றி வந்த டெம்போ எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக பிரேக் போட்டதால் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதேபோன்று திம்பம் அடுத்த ஆசனூர் மலைப்பாதையில் மழையின் காரணமாக வனவிலங்குகள் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டபோது நிலக்கரி லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர், கிளீனர் காயமடைந்தனர்.
மழையின் காரணமாக பிரேக் போட்டபோது நிலக்கரி லாரி தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் வாகனங்கள்.
சத்தியமங்கலம் பகுதியில் அதிகாலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சாலையில் மழை நீர் தேங்கியிருப்பதால் வேகமாக செல்லும் வாகனங்களால் ஒரே நாளில் 3 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் விவசாயி கார்த்திக் உயிரிழந்தார். 3 ஓட்டுநர்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில் சாலை விபத்துகள் அதிகமாகி வருவதால் வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை இயக்குமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.