டெல்டா பாசனத்துக்காக கல்லணை திறப்பு: 7 அமைச்சர்கள் பங்கேற்பு

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணைத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணை புதன்கிழமை காலை திறக்கப்பட்டது.
கல்லணையிலிருந்து காவிரியில் பொத்தானை அழுத்தி தண்ணீர் திறந்து விடுகின்றனர் அமைச்சர்கள்.
கல்லணையிலிருந்து காவிரியில் பொத்தானை அழுத்தி தண்ணீர் திறந்து விடுகின்றனர் அமைச்சர்கள்.
Published on
Updated on
2 min read


தஞ்சாவூர்: டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணைத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணை புதன்கிழமை காலை திறக்கப்பட்டது.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூன் 12 ஆம் தேதி காலை திறந்து வைத்தார். கல்லணைக்கு காவிரி நீர் புதன்கிழமை அதிகாலை வந்தடைந்தது.

இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணை புதன்கிழமை காலை 9.15 மணியளவில் திறக்கப்பட்டது.

கல்லணையிலிருந்து வினாடிக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தலா 500 கன அடி வீதம் திறந்துவிடப்படுகிறது.

இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு (நகர்ப்புற வளர்ச்சி), எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (வேளாண் துறை), எஸ். ரகுபதி (சட்டத் துறை), அன்பில் மகேஷ் பொய்யாமொழி (பள்ளிக் கல்வித் துறை), மா. சுப்பிரமணியன் (ம்க்கள் நல்வாழ்வுத் துறை), சிவ.வீ. மெய்யநாதன் (சுற்றுச்சூழல் துறை), எஸ்.எஸ். சிவசங்கரன் (பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை), தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து காவிரியில் பாயும் தண்ணீர்.

இதையடுத்து செய்தியாளரிடம் அமைச்சர் நேரு தெரிவித்தது:

கல்லணைக்கு தண்ணீர் வருவதைப் பொருத்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகப்படுத்தப்படும் 
 
கல்லணையிலிருந்து தற்போது திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதிக்குச் செல்ல 10 நாள்கள் ஆகும். 

கொள்ளிடத்தில் வெளியேறும் தண்ணீர்

தூர்வாரும் பணி இதுவரை 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தண்ணீர் சென்றடைவதற்குள் 100 சதவீத பணிகள் முடிவடைந்து விடும்.

இந்தப் பாசனத்தின் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.04 லட்சம் ஏக்கரும், திருவாரூர் மாவட்டத்தில் 89 ஆயிரம் ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 5,000 ஏக்கரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 96 ஆயிரம் ஏக்கரும், கடலூர் மாவட்டத்தில் 16,000 ஏக்கரும் என மொத்தம் 3.10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் நேரு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com