புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசின் அமைச்சர் பட்டியலை துணைநிலை ஆளுநரிடம் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரியில் முதல்வர் என். ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. என்.ஆர் காங்கிரஸ் தரப்பில் முதல்வர் மற்றும் பாஜக தரப்பில் சட்டப்பேரவை தலைவர் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமைச்சரவை பதவி ஏற்பு நடைபெறாமல் தாமதமாகி வந்தது.
இந்த நிலையில், என்.ஆர் காங்கிரஸ் கட்சி க்கு மூன்று அமைச்சர்களும், பாரதிய ஜனதாவுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும் என்று கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், அமைச்சர்கள் யார் என்பதில் இரு கட்சிகளிடையே தேர்வு செய்வதில் நீண்ட கால தாமதமாகி வருகிறது.
இதனிடையே அமைச்சரவை பதவியேற்பு நடைபெறும் என்று கடந்த இரண்டு வாரங்களாக கூறப்பட்டு வந்தது. எனினும் ஒருமித்த கருத்து ஏற்படாமல் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் என்.ஆர். காங்கிரஸ் பாஜக இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு ஒருவழியாக அமைச்சரவைக்கான பெயர்களை முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமை காலை ஒன்பது முப்பது மணிக்கு ஆளுநர் மாளிகைக்குச் சென்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்தார்.
அப்போது அமைச்சரவை பதவியேற்பது தொடர்பான பெயர் பட்டியலை வழங்கி ஆலோசனை நடத்தினார்.
இதனால் புதுச்சேரியில் அமைச்சரவை பதவியேற்பு வியாழக்கிழமை அல்லது ஓரிருநாளில் நடைபெற உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.