பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் தொகுப்பில் கரும்பு மற்றும் பரிசுத் தொகையும் இடம்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
ஜனவரி மாதம் கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள பொங்கல் தொகுப்பு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 பொருள்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், கோதுமை மாவு, உப்பு ஆகிய 20 பொருள்கள் அடங்கும்.
இந்நிலையில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் கரும்பு மற்றும் பரிசுத் தொகை இடம்பெற வேண்டும் என அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பான தனது சுட்டுரைப் பதிவில் அவர், “பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும்,முழு கரும்பும் வழங்கி வந்தோம். ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம்,கரும்பை காணவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு,தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வசிக்கும் 2கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்ககுக்கு 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.