/

வேதா இல்ல விவகாரம்: மேல்முறையீடு செய்யும் அதிமுக

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக்கோரி அதிமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image

வேதா நிலையம்

Updated On :1 டிசம்பர் 2021, 1:13 pm

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக்கோரி அதிமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் முந்தைய அதிமுக அரசு சட்டம் இயற்றியது.

அதனைத் தொடர்ந்து அரசின் இந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினர்களான தீபா, தீபக் இருவரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் செல்லாது என்று தெரிவித்த உயர்நீதிமன்றம், ஜெயலலிதா வாரிசுகள் என அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்கிடம் வேதா இல்லத்தின் சாவியை மூன்று வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் அதிமுக மேல்முறையீடு செய்யும் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்து வந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.