பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலையானது கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தொடர்ந்து உயர்ந்து வந்தது.
அதிலும் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி மட்டும் அனைத்து ரகமான நூல்களும் கிலோவுக்கு ரூ.50 வரையில் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு திருப்பூர் பின்னலாடை உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் அதனைச்சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களும் அனைத்தும் கண்டனம் தெரிவித்திருந்தது.
மேலும், ஜாப்ஒர்க் நிறுவனங்களும் தங்களது கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதே போல், உள்நாட்டு வியாபாரத்துக்காக உற்பத்தி செய்யப்படும் பின்னலாடை நிறுவனங்கள், பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களும் பின்னலாடைகளுக்கான விலையையும் உயர்த்தியிருந்தது.
இதனிடையே, நூல் விலை உயர்வைத் திரும்பப் பெறக்கோரியும், நூல், ஏற்றுமதியை தடை செய்யக்கோரியும் பல்வேறு தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது.
திருப்பூர் அரசு விழாவில் பங்கேற்க நவம்பர் 22 ஆம் தேதி வருகைபுரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் தொழில் அமைப்புகள் நூல் விலை உயர்வு குறித்து வலியுறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சார்பில் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம், பின்னலாடை நிறுவனங்கள் அடையாள வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டன.
இந்த நிலையில், நூற்பாலைகள் கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி நூல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதன்படி, பின்னலாடை உற்பத்திக்கான நூல் விலையானது அனைத்து ரகங்களுக்கும் சராசரியாக கிலோவுக்கு ரூ.10 குறைத்துள்ளதாக திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எம்.பி.முத்துரத்தினம் தெரிவித்துள்ளனர்.