உத்தரப் பிரதேச அமைச்சர் சுவாமி பிரசாத் மெளரியா பாஜகவிலிருந்து வெளியேறிய நிலையில் 2014ஆம் ஆண்டு வெறுப்பைத் தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது பதியப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் பாஜகவின் முக்கிய அமைச்சராக அறியப்பட்ட சுவாமி பிரசாத் மௌரியா தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன் அக்கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் அவா் இணைய இருப்பதாக தெரியவந்துள்ளது.
அவரைத் தொடர்ந்து பாஜகவைச் சோ்ந்த பிரஜேஷ் பிரஜாபதி, ரோஷன் லால் வா்மா, பகவதி சாகா் உள்ளிட்ட மேலும் 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும், சுற்றுலாத்துறை அமைச்சர் தாரா சிங் செளகானும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனா்.
இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு இந்து மதக் கடவுள்களை இழிவாகப் பேசியதாக சுவாமி பிரசாத் மெளரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஜனவரி 24ஆம் தேதிக்குள் ஆஜராக அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.