அதிமுக ஒன்றாகத்தான் உள்ளது என்று அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொம்மைக்குட்டைமேட்டில் அதிமுகவின் 51ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக 3-ஆக உடைந்துள்ளது என கூறுகிறார். அதிமுக ஒன்றாகத்தான் உள்ளது. உடைக்க வேண்டும் என ஸ்டாலின் முயற்சி செய்தால் அது தோல்வியில் தான் முடியும்.
அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படும். இந்த கூட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிள்ளையார் சுழி. காலத்தால் அழிக்க முடியாத திட்டங்களை அதிமுக வழங்கியது. இந்த திட்டங்களை திமுகவால் கொடுக்க முடியுமா? திட்டங்களை நிறுத்திவிட்டீர்கள், இதற்கான தக்க பதிலடியை வரும் தேர்தலில் மக்கள் கொடுப்பார்கள்.
திமுகவால் அதிமுகவை நேரடியாக எதிர்க்க முடியாது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தவிடுபொடியாக்கி மீண்டும் ஆட்சியமைப்போம். பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான், இணைப்புக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.