சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் வியாழக்கிழமை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழகத்தின் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 19 பேரை கடந்த மார்ச் 6-ஆம் தேதி இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து தமிழக மீனவர்கள் 19 பேரையும் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய தூதரக அதிகாரிகள், தமிழக மீனவர்களை தங்களுடைய பாதுகாப்பில் வைத்து, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, 19 மீனவர்களையும் விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.
மீனவர்களிடம் பாஸ்போர்ட் இல்லாததால், தூதரக அதிகாரிகள் அனைவருக்கும் அவசர பயணச் சான்றிதழ் வழங்கினர். இலங்கையில் இருந்து 19 மீனவர்களுக்கும் சென்னைக்கு செல்வதற்கான விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்தது இந்திய தூதரகம், இலங்கையின் கொழும்பில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் 19 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேரும் வியாழக்கிழமை காலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
சென்னை விமான நிலையம் வந்தடைந்த மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
கச்சத்தீவை விட்டுக் கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை என ஜவஹர்லால் நேரு தெரிவித்தார்.கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளில் 6184 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் நடவடிக்கையால் தான் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பாக தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளதாகவும், நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறினார். கச்சத்தீவு பிரச்னை எப்படி உருவானது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.