வயநாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காகச் சென்ற பேரணியில் கட்சிக் கொடிகள் அனைத்தையும் காங்கிரஸ் தவிர்த்ததைச் சுட்டிக்காட்டி, முஸ்லிம் லீக் கொடிகளைக் கொண்டுவர ராகுல் காந்தி “வெட்கப்படுவதாக” மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவருமான ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியைத் தோற்கடித்தவரான இரானி, அப்படி வெட்கப்பட்டால், அவர்களுடைய ஆதரவை ராகுல் காந்தி நிராகரித்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ. ஆதரவை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட பா.ஜ.க. வேட்பாளரான கட்சியின் மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் இன்று வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுடன் ஸ்மிருதி இரானி பேசினார்.
வயநாடு தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய புதன்கிழமை ராகுல் காந்தி சென்ற பேரணியில் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.