சிதம்பரம்: பாஜகவை எதிர்ப்பதால் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வருமானவரித்துறையினர் சோதனை என்ற பெயரில் மிரட்ட பார்கின்றனர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டினார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் திருச்சின்னபுரத்தில் பிரசாரத்தைத் தொடங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் பாஜகவை எதிர்ப்பவர்களை வருமானத்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ வைத்து ஹோமத் சோரன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோரை கைது செய்து முடக்கி வருகின்றனர்.
அந்த வகையில் பாஜகவை எதிர்ப்பதால் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வருமானவரித்துறையினர் சோதனை என்ற பெயரில் மிரட்ட பார்கின்றனர். உளவியல் ரீதியாக நெருக்கடி தருவதாக குற்றச்சாட்டினார்.
பாஜக அல்லது பாஜக ஆதரவு நபர்களிடம் வருமானவரித்துறையோ, அமலாக்கத்துறையோ இப்படி சோதனை நடத்தியதாக சான்றுகள் இல்லை. அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.
பிரசாரத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.