சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினா் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (ஏப். 17) முடிவடைந்ததால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி. ஆனந்த் முன்பு செந்தில் பாலாஜி ஆஜா்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 22 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதன்மூலம் செந்தில் பாலாஜிக்கு 33-ஆவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக செந்தில் பாலாஜியை ஏப். 22 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.