பெங்களூரு; கர்நாடக மாநிலத்தில் கல்லூரிக்குள் கத்தியால் குத்தப்பட்டு பலியான நேஹா ஹிரெமத்தின் உடல்கூறாய்வு அறிக்கையில், அவரது உடலில் 14 முறை கத்தியால் குத்தப்பட்டிருப்பதாகவும், 58 வினாடிகளில் அவர் மரணமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18ஆம் தேதி நடந்த படுகொலைச் சம்பத்தில் பலியான நேஹாவின் உடல்கூறாய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேஹாவில் உடலில் 14 முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளது. கத்திக் குத்துக் காயத்தால் உடலிலிருந்து ரத்தம் வெளியேறி வெறும் 58 வினாடிகளில் நேஹா மரணத்தைத் தழுவியிருக்கிறார்.
ஹூபள்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு நேஹா கொண்டு சென்றபோது, அவரது உடலில் இதயத் துடிப்பு இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கத்திக் குத்துகள் அவரது உடலின் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில்தான் விழுந்துள்ளது. முதுகிலும் கத்தியால் குத்தபப்ட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 14 முறை அவரது உடலில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது. அவரது கழுத்தில் 5 செமீ ஆழத்துக்கு பலமான கத்திக்குத்து விழுந்துள்ளது. அவரது உடலில் கத்தியால் குத்தியபோது, கழுத்தில் இருந்த மூச்சுக்குழாய் மற்றும் ரத்த நாளங்கள் அறுந்து வெறும் 58 வினாடிகளில் மரணம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, நேஹாவுடன் கல்லூரியில் படித்த ஃபயாஸ், கல்லூரிக்குள் வந்து, தேர்வு அறையிலிருந்து நேஹா வரும்வரை காத்திருக்கிறார். அவர் வெளியே வந்ததும் அவர் மீது மறைத்துவைத்திருந்த கத்தியால் கண்மூடித்தனமாக குத்துகிறார். இது குறித்து அவர் காவலர்களிடம் கூறுகையில், தான் நேஹாவிடம் பேச வந்ததாகவும், அவர் மறுத்ததால் ஆத்திரத்தில் குத்தியதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம், அங்கு அரசியலாக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. எப்போதெல்லாம் ஒரு குற்றச் செயலில் ஒரு முஸ்லிம் ஈடுபடுகிறாரோ, அதை பாஜக திருவிழாவாக்கிவிடும் என்று தர்வாத் மாட்ட பொறுப்பாளர், அமைச்சர் சந்தோஷ் லாத் தெரிவித்துள்ளார். அதுபோலவே நேஹா கொலையையும் பாஜக அரசியலாக்குகிறது என்றார்.