சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் தூக்கிலிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதல் மாடி, ரயில்வே அதிகாரிகளின் ஓய்வறைகள் அமைந்துள்ளன. இங்கு வெளிப்பகுதியில் சுமார் 26 வயதுடைய பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதாக சென்ட்ரல் ரயில்வே காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது அங்கே பெண் ஒருவர் கருப்பு நிற துணியால் இரும்பு ஸ்டேண்டில் தூக்கில் தொங்கியவாறு அமர்ந்த நிலையில் சடலமாகக் கிடந்தார்.
இதையடுத்து ரயில்வே போலீசார் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி, உடல் கூறாய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் இறந்து கிடந்த இடத்தில் தடயங்களை சேகரித்துள்ளனர்.
பெண் இறந்து கிடந்த அருகில் ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன. அதனையும் காவல்துறையினர் கைப்பற்றினர். பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அந்த பெண் முதல் மாடிக்கு எப்படிச் சென்றார்? பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் அவரைக் கேள்வி எழுப்பவில்லையா? என்ற ரீதியிலும் விசாரணை நடந்து வருகிறது. சந்தேகத்தின் பேரில் பல்வேறு கோணங்களில் ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.