சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பு இன்று (ஏப். 29) விசாரணைக்கு வந்தன. நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் கானொலி மூலம் ஆஜராகினர்.
இந்த விசாரணையில், உதகை மற்றும் கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு சமர்பித்த அறிக்கையில், உதகைக்கு 20 ஆயிரம் வாகனங்கள் வரை செல்வதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழல் தொடர்ந்தால், சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும், கல்வி நிறுவனங்கள் ஆய்வறிக்கை அளிக்கும் வரை இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தரப்பில் தெரிவித்தனர்.
இந்நிலையில், கரோனா காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இ-பாஸ் நடைமுறையை மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்தான, தொழில்நுட்ப உதவிகளை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், உள்ளூர் மக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.