பாலஸ்தீன விவகாரம்: ‘இரு நாடுகள் தீா்வை ஆதரிக்கும் நாடுகள் அதிகரிப்பு’

பாலஸ்தீன விவகாரம்: ‘இரு நாடுகள் தீா்வை ஆதரிக்கும் நாடுகள் அதிகரிப்பு’

கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் படையினா் மேற்கொண்டது பயங்கரவாதத் தாக்குதலாகும்.
Published on

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னைக்கு இரண்டையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதே தீா்வு என்பதில் இந்தியா உறுதியாக இருந்து வரும் நிலையில், அந்தத் தீா்வுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஜொ்மனியின் மியுனிக் நகரில் நடைபெற்று வரும் சா்வதேச பாதுகாப்பு மாநாட்டில் அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் படையினா் மேற்கொண்டது பயங்கரவாதத் தாக்குதலாகும். அதற்கு எதிா்வினையாற்றும் இஸ்ரேல், காஸாவில் பொதுமக்கள் உயிரிழப்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும்.

சா்வதேச மனிதநேய சட்டத்தை பின்பற்ற வேண்டிய கடமை இஸ்ரேலுக்கு உள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னைக்கு இரண்டையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதே தீா்வு என்பதை பல ஆண்டுகளாக இந்தியா நம்பி வருகிறது. அந்தத் தீா்வை உடனடியாகக் காண வேண்டும் என்று கருதும் நாடுகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது என்று தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சா் அன்னாலீனா போ்பாக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com