அவிநாசியில் இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் வந்தவரை ஒதுக்கிய அரசுப் பேருந்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவிநாசி அருகே கருவலூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் அருண். இவரது மனைவி ஜோதி. இவர்கள் வெள்ளிக்கிழமை தங்களது குழந்தையுடன் கருவலூரில் இருந்து அவிநாசி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவிநாசி அருகே வரும் போது பின்னால் மேட்டுப்பாளையத்திலிருந்து பழனி நோக்கி வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் குடும்பத்துடன் வந்த இருசக்கர வாகனத்தை முந்திச் சென்று ஒதுக்கி உள்ளார்.
இதனால் நிலை தடுமாறி கீழே விழ நேர்ந்த இருசக்கர வாகன ஓட்டி அருண், சாதுரியமாக இருசக்கர வாகனத்தைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த அருண் அவிநாசி பழைய பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வழிமறித்து இது குறித்துக் கேட்டுள்ளார்.
எதற்கும் உரியப் பதிலளிக்காமல், மீண்டும் வேகமாக கிளம்பிய அரசு பேருந்தை நிறுத்தி பேருந்து முன் அமர்ந்து அருண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இனிவரும் காலங்களில் இதுபோல் நடக்காது என ஓட்டுநர் உறுதி அளித்து மன்னிப்பு கேட்டதையடுத்து, போராட்டத்தைக் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.