ஆம்ஸ்ட்ராங் கொலை: பா.இரஞ்சித் பதிவும், எதிர்வினைகளும்!

ஆம்ஸ்டாராங் கொலை சம்பவம் கொலை சம்பவம் குறித்து இயக்குநர் பா. இரஞ்சித் வெளியிட்ட பதிவும், எதிர்வினைகளும்...
ஆம்ஸ்ட்ராங் கொலை: பா.இரஞ்சித் பதிவும், எதிர்வினைகளும்!
Published on
Updated on
4 min read

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் குறித்து இயக்குநர் பா. இரஞ்சித் தனது எக்ஸ் தளப்பதிவில் வெளியிட்டுள்ள கருத்து குறித்து சமூக ஊடகங்களில் விவாவதம் எழுந்துள்ளது.

இயக்குநர் பா. இரஞ்சித்தின் பதிவு:

கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!

இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்:

1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?

2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இதுகுறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்?

3. சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

4. பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாள்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.

5. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?

6. அண்ணனின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைத்தளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. ‘அவரே ஒரு ரெளடி’, ‘ஒரு ரெளடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்’, ‘கட்டப்பஞ்சாயத்து செய்பவர்’, ‘பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்’ என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன?

7. ஆதிக்க வர்க்கத்தாரே! எங்களின் சுயமரியாதையின் பொருட்டு நாங்கள் கிளெர்ந்தெழுவதை ரெளடித்தனம் என்கிறீர்கள். வருவோருக்கெல்லாம் லட்சக்கணக்கான புத்தகங்களை அன்பளிப்பாய் கொடுத்தவர், தம்மமே மானுட சமூகத்தின் விடுதலையை தரும் என்று பாபாசாகேப் வழியில் பௌத்தத்தை முன்னெடுத்தவருக்கு எதிராய் இத்தகைய கதைகளை உருவாக்குவதின் மூலம் உங்களை நீங்களே திருப்திப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும், ஒடுக்குதலுக்கு எதிராக அண்ணன் ஆம்ஸ்ட்ராங் போல கிளெர்ந்தெழுகிறவர்களால் நாங்கள் பெற்ற எழுச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.

முடிவாக, சிறுவயது முதலே அண்ணனின் அன்பில் ஈர்க்கபட்டவன் நான். திரைத்துரையில் நான் வந்த பிறகு என் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் எந்நாளும் அக்கறை கொண்டு என்னை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருந்தவர். பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் பாதையில் எவ்வித சமரசமுமின்றி தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அண்ணனை இழப்பது என்பது என் வாழ்வில் மிகப்பெரிய பின்னடைவாகவே நான் கருதுகிறேன். இதை சரி செய்ய அவரின் பேச்சுகளும் சிந்தனைகளுமே என்னை (எங்களை)வழிநடத்தும் என்று பதிவிட்டுள்ளார்.

எதிர்வினைகள்:

பா. ரஞ்சித் வெளியிட்டுள்ளப் பதிவுக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு மற்றும் ஆதரவு கருத்தினை தெரிவித்து வருகின்றனர். ராஜ் என்பவர், “ஏன்டா நீங்களே மாற்றி மாற்றி வெட்டிட்டு சாகிறதுக்கு பேர் ரவுடிதனமில்லையா ? ஆதிக்கசாதி இங்க எங்க வந்தது ? இதுவரை எத்தனை முறை எந்த ஆதிக்கசாதிகாரனுக இவனை தாக்கியிறுக்கானுக ? ஆதிக்கசாதி்காரனுகளுக்கு பயந்தா 20 லட்ச ரூபாய்க்கு துப்பாக்கி ? 100 பேரை படிக்கவைச்சா கட்டபஞ்சாயத்து சரியாகுமா ?” என்று தெரிவித்துள்ளார்.

ஆதிக் என்பவர், “பகுஜன் சமாஜ் கட்சியில் எல்லோரும் புனிதர் இல்லை, தலித் மக்கள் எல்லோரும் அப்பாவிகள் இல்லை. இதே பகுஜன் சமாஜ் கட்சியின் தலித் மாவட்ட‌ தலைவரின் கட்டப்பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டவன், இதே தலித் மக்களின் ரௌடி தனத்திற்கு ஆளக்கப்பட்டுள்ளேன். உங்களின் நியாத்தைக் கேளுங்கள் ஆனால் அநியாயமாக எல்லோரையும் பழிக்காதீர்கள். ரௌடியை ரௌடி‌ என்று சொல்லுங்கள் அதற்கு தற்காப்பு சாயம் பூசாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

பரசுராம் என்பவர், “பா ரஞ்சித் ஆரம்பத்திலிருந்து எப்போதும் திமுகவையும் பெரியாரையும் எதிரியாகத்தான் பார்த்து வந்திருக்கிறார். அதற்கான நிரூபணம்தான் மேலே அவர் எழுதியவை” என்று தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: பா.இரஞ்சித் பதிவும், எதிர்வினைகளும்!
ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிவாங்க ஆம்ஸ்ட்ராங் கொலையா? படுகொலைகளின் கதை!

அருள்சாமிஜான் என்பவர், “பாதுகாப்பு வளையத்தில் தங்களை வைத்திருந்ததாக சொல்கிறீர்களே அதுக்குபேர் என்ன? குண்டர்கள்தானே. அவர் நல்லது செஞ்சதுபோல கெட்டதும் செய்ததாக பாதிக்கப்பட்டோர் உணர்வதற்கும் பலி வாங்குவதற்கும் திமுக எப்படிப்பொறுப்பாகும் அடங்கமறு அத்துமீறு ஆயுதமேந்துனு போதிச்சு தலித்துகளை குற்றவாளியாக்கியது யார்?” எனக் கேட்டுள்ளார்.

பிரபா என்பவர், “நீங்கள் சொல்வது மிக சரியானது அண்ணா, ஆருயிர் அண்ணன் பூவை மூர்த்தியார் இறந்த பிறகு நம் சமூகத்திற்கு உண்மையான காவலன் யார் என்பதே தெரியவில்லை, நம் சமூகக் காவலர்கள் இருந்தும் அவர்கள் அரசாங்கத்தால் மறைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் அதையும் மீறி எழுந்தாள் அவர்கள் படுகொலையோ அல்லது” என்று ரஞ்சித்துக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

சிம்பு என்பவர், “ஆருத்ரா பிஜேபியினு நல்லா திசை திருப்பு பண்றீங்க , கொன்றது யார் என்று தெரிய வேண்டும் என்றால் நீங்கள் திமுக காரனைத்தான் தேட வேண்டும் அவர் சொந்த இடத்தில் புதைக்க விடாமல் தடுத்த அதிகார வர்க்கத்தினர் யார்? அவர் அங்கே புதைத்தால் அதனால் பாதிக்கப்படுபவர் யார்? அதை சிந்தியுங்கள் முதலில்” என்று கூறியுள்ளார்.

தேவா என்பவர், “யாருமே இஷ்டப்படி பேசி விட்டு தப்பிக்க முடியாது-ஆதாரங்கள் தேவை, தவறான வழிகளில்-யார் சென்றாலும் தவறுதான்-அதற்கான பின் விளைவுகளை என்றோ ஒரு நாள் அவர்கள் சந்தித்து தான் ஆகணும். இதுவரை நடந்த விசாரணையில்-கொன்ற கும்பல் & கொல்லப்பட்டவர் இருவரும் ஒரே சமூகம் தான், இதில் எங்கே சாதி வந்தது” என்று தெரிவித்துள்ளார்.

கோபி சங்கர் "சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என்று அங்கேயே பேட்டி கொடுக்கிற அவரசமான அவசியம் விசிகவின் திருமா & காங்.,யின் செல்வப்பெருந்தகை இருவருக்குமே வந்தது ஏன் ? தனிப்பட்ட முறையில் மறைந்த ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவர் விஷயங்களைப் பற்றி கூடுதலாக அறிந்தவர்கள் இந்த இருவருமேகூட" என்று கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: பா.இரஞ்சித் பதிவும், எதிர்வினைகளும்!
ஆம்ஸ்ட்ராங்கை கொன்றவர்களும் தலித்துகள்தான் எனக் கூற மறுப்பது ஏன்? - பா. இரஞ்சித்துக்கு கேள்வி

பா.இரஞ்சித்தின் கருத்துக்கு திமுகவினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பினாலும், ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் இப்பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com