
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அவசர அலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கனகு மகன் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ் (49), அவரது மனைவி விஜயா (42), கனகுவின் மற்றொரு மகன் தாமோதரன் (40) ஆகிய மூவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை காலை பலர் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் இதுவரை 34 பேர் இறந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரு.ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து, கள்ளச்சாராய வியாபாரிகள் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், தாமோதரன் ஆகியோரை கைது செய்தனர்.
சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவல் கண்காணிப்பாளர் உள்பட 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்ட நிலையில், புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த், புதிய காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்துக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ள நிலையில், கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் அவசர அலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவையில் இன்றைய அலுவல்கள் முடிந்தவுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.
அவசர அலோசனை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, முத்துசாமி உள்ளிட்டோர் மற்றும் காவல்துறை டிஜிசி, உளவுத்துறை ஐஜி, மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.