
62 பேரின் ஆன்மாக்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சும்மா விடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்க தவறியதாகக் கூறி திமுக அரசைக் கண்டித்தும், கள்ளச்சாராயம் மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்டச் செயலாளர்கள் ஆதிராஜாராம், தி. நகர் சத்யா, விருகை ரவி, பால கங்கா, ஆர்.எஸ். ராஜேஷ், வேளச்சேரி அசோக், வெங்கடேஷ் பாபு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
மேலும், 500க்கும் மேற்பட்ட காவல்துறையை சார்ந்தோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு இடையே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
திமுக அரசு பொறுப்பேற்றதுமுதல் கள்ளச்சாராய மரணங்கள், போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்டவை தமிழகத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதில் பலர் கண் பார்வை இழந்துள்ளனர். கடந்த முறை கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்ட பொழுது இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என முதலமைச்சர் பேசிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மருந்து இல்லை எனக் கூறிய பிறகுதான் மும்பைக்கு சென்று மருந்துகளை வாங்கி வந்தனர்.
மடியில் கனமில்லை என்றால் இதை சிபிஐக்கு மாற்றலாமே? சிபிஐக்கு மாற்றினால் ஆளும் கட்சியினர் பலர் மாட்டுவார்கள். ஒரு நபர் ஆணையம் வெறும் கண் துடைப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது.
மருந்து இல்லை என பதற்றம் ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியது தொடர்பான கேள்விக்கு, அமைச்சர் இப்படி பேசுவது சரியாக இல்லை,
62 பெயரின் ஆன்மாக்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சும்மா விடாது. 2026ல் ஸ்டாலினை மக்கள் நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்து விடுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.