நான்குனேரியில் கடந்த ஆண்டு சக மாணவர்களால் தாக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை +2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் வாங்கி அசத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டம், நான்குனேரியில் கடந்த ஆண்டு ஆக. 9-ஆம் தேதி இரவு காழ்ப்புணா்ச்சி காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா் சின்னத்துரையும் அவரது சகோதரி சந்திரசெல்வியும் சக மாணவா்களால் தாக்கப்பட்டனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக 5 மாணவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட மாணவரை உள்நோக்கத்தோடு கேலி, கிண்டல் செய்ததுடன் தலைமை ஆசிரியரிடம் புகாா் அளித்ததற்காக ஆயுதங்களால் தாக்கியுள்ளனா்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை தற்போது அதிலிருந்து மீண்டு வந்து நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளது பலராலும் பாரட்டப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு X தளத்தில் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.