![அரவிந்த் கேஜரிவால்](http://media.assettype.com/dinamani%2Fimport%2F2022%2F12%2F14%2Foriginal%2Faravind_kejriwal_new_3_edited.jpg?rect=0%2C0%2C500%2C281&w=480&auto=format%2Ccompress&fit=max)
கிழக்கு தில்லி குழந்தைகள் மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை பதறவைப்பதாகவும், அலட்சியத்திற்கு காரணமானவர்கள் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்றும் முதல்வர் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தனது எக்ஸ் தளப்பதிவில் கூறுகையில்,”விவேக் விஹாரில் ஏற்பட்ட தீ விபத்தில் தங்கள் குழந்தைகளை இழந்தவர்களுடன் அரசாங்கம் துணை நிற்கிறது, காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சையை நிர்வாகம் உறுதி செய்து வருகிறது. தீவிபத்துக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அலட்சியமாக இருப்பவர்கள் காப்பாற்றப்பட மாட்டார்கள்” என்றார்.
இனிமேலும் அலட்சியமாக இருந்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சௌரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
''ஷாஹ்தராவில் உள்ள பேபி கேர் நியூ பார்ன் மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது. பிறந்து சில நாள்களேயான 12 குழந்தைகளில் 7 பேர் இறந்தனர். ஐந்து குழந்தைகள் மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்'' என்று தீயணைப்பு அதிகாரி அதுல் கார்க் கூறினார்.