

ஒமன் நாட்டின் மஸ்கட்டிலிருந்து கேரளத்தின் கண்ணூருக்கு 1 கிலோ தங்கத்தை மலக்குடலில் மறைத்துக் கடத்திய விமானக்குழு பெண் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
உளவுத்துறை தகவலின்படி வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், மே. 28 அன்று கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் மஸ்கட்டில் இருந்து கண்ணூருக்கு விமானத்தில் வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த சுரபி கதுன் என்ற பெண் விமான பணியாளரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் அவரை விசாரணை செய்த போது அவரின் மலக்குடலில் மறைத்து வைத்து 960 கிராம் அளவிலான தங்கத்தை எடுத்து வந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், தீவிர விசாரணைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் கண்ணூர் பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானக்குழு பணியாளர் ஒருவர் மலக்குடலில் மறைத்துத் தங்கத்தைக் கடத்தியதற்காகக் கைது செய்யப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரிவான விசாரணையில் இதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மூலம் அந்தப் பெண் ஏற்கனவே பலமுறை இதுபோன்று தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தியது தெரிய வந்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் கேரளத்தின் கடத்தல் கும்பல்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான நிறுவன பிரதிநிதி ஒருவரை விசாரிக்கத் தொடர்புகொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.