ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தாக குற்றம் சாட்டப்பட்ட நபர் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் மும்பை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கொலை மிரட்டல்களைத் தொடர்ந்து, தற்போது ஷாருக்கானுக்கும் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.
மும்பை, பாந்த்ரா காவல் நிலையத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பில், ஷாருக்கானை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இதைத் தடுக்க ரூ. 50 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாந்த்ரா காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிக்க: தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,080 குறைந்தது!
இந்த அழைப்பு சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஃபைசான் கான் என்பவரின் தொலைபேசி எண்ணில் இருந்து வந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், அவரது தொலைபேசி கடந்த வாரம் தொலைந்துவிட்டதாகவும், ஏற்கெனவே இது தொடர்பாக கமர்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் ஃபைசான் கான் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், வழக்குரைஞர் ஃபைசான் கானை மும்பை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், இன்று அதிகாலை ராய்ப்பூரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.