10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் பணி வழங்கல் விவரங்களை இபிஎஸ் வெளியிட தயாரா?

கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டனர் என்ற விவரங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட தயாரா ?
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on
Updated on
2 min read

கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறை‌யில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் விவரங்கள், கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் அளித்த விவரங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட தயாரா? என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தேதியில் சுமார் 2,600 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்றும், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள் என்று ஆயிரக்கணக்கான மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் செய்திகள் தெரிய வருகிறது. மேலும், பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் பதவியை நியமிக்க இயலவில்லை எனில் மருத்துவக் கல்லூரிகளை திறப்பது ஏன் ? என்று ஒரு வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. எனவே, உடனடியாக திமுக அரசு தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

இந்த நிலையில், அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் மருத்துவத்துறை‌யில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் விவரங்களை, கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் அளித்த விவரங்களை எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் மண்டல அரசு கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் அரசினர் கண் மருத்துவமனையில் 39 ஆவது கண் தான இருவார விழா மற்றும் கண்தானம் செய்த நல்ல உள்ளங்களை சிறப்பிக்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆசியாவின் பழமையான மருத்துவமனை மற்றும் உலகின் 2 ஆவது பழமையான மருத்துவமனை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை. 13 வயது சிறுவனுக்கும், 70 வயது முதிய பெண்மணிக்கும் வெற்றிகரமாக கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலிடம்

உறுப்பு தானத்தில் தொடர்ந்து தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருகிறது. உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து இதுவரை 249 பேர் உடலுறுப்பு தானம் செய்துள்ளனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நமது பாடத்திட்டம் குறித்து ஆளுநருக்கு என்ன தெரியும்? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து 42 கண்கள் இதுவரை தானமாக பெறப்பட்டுள்ளது. தேசிய அளவில் 25 சதவீதம் கண்விழிகள் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் பெறப்படுகிறது.

1,25,634 கண் அறுவை சிகிச்சைகள்

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 1,25,634 கண் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டு மகத்தான சாதனை செய்துள்ளது.

வருடத்திற்கு 1,000 க்கும் மேற்பட்டோர் வரையில் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் மட்டும் இதுவரை 6,750 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்துள்ளனர்.

முதல் கண் வங்கி தொடங்கப்பட்டது இந்த எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் தான்.

தமிழ்நாடு முதல்வர் ஆணைக்கிணைங்க ரூ.65 கோடியில் புதிய கட்டடம் கட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கை குறித்து செய்தியாள்ர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், ஒரு துறையில் என்ன நடக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிந்து கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தியதால் 116 மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஒருவர் மன உளைச்சல் காரணமாக உயிரிழந்தார். எந்த ஆட்சியிலும் இப்படி நடந்தது கிடையாது. கடந்த அதிமுக ஆட்சியில்தான் இதுபோன்றுநடைபெற்றது. கடந்த ஆட்சியில் பணி ஆணை பெறுபவர்களிடம் விருப்ப கலந்தாய்வு அதிமுக ஆட்சியில் நடத்தப்படவில்லை.

ஆனால் திமுக ஆட்சியில் மருத்துவர்களுக்கு எந்த பகுதியில் பணி வேண்டும் என்று கேட்டு அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி வருகிறோம்.

6,744 பேருக்கு பணி

கடந்த மூன்று ஆண்டுகளில் மருத்துவத் துறையில் 6,744 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 36,000 பேருக்கு அவர்கள் விருப்பப்பட்ட இடத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறை‌ பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் விவரங்களை, கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் அளித்த விவரங்களை எடப்பாடி பழனிசாமி வெளியிட வேண்டும். அவர் ஆட்சி காலத்தில் அவரும் அமைச்சர்களும் எந்தெந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள் என்ற விவரங்களையும் வெளியிட வேண்டும்.

12,120 பேருக்கு டெங்கு பாதிப்பு

இந்த ஆண்டு மட்டும் 12,120 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் தற்போது வரை டெங்கு பாதிப்புக்கு 5 பேர் இறந்துள்ளனர்.

தனியார் மருந்தக ஆய்வகங்களில் பரிசோதனை முடிவுகள் தவறாக இருக்கும் என எண்ணும் பட்சத்தில் தகவல் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com