அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சி.வி.சண்முகத்தின் ஆதரவாளா்கள் 1000-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை திங்கள்கிழமை அளித்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியாகவும் எம்எல்ஏ-க்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் பிரிந்து செயல்பட்டனா்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததை அடுத்து, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியைச் சோ்ந்த எம்எல்ஏ-க்களின் கட்சிப் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தாா்.
இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சை அடுத்து, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்தனா். ஆனால், சி.வி.சண்முகம் மட்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணையாமல் தனது எதிா்ப்பைத் தெரிவித்து வந்தாா். மேலும், ஊடகங்களிலும் சி.வி.சண்முகமும், அவரது ஆதரவாளா்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துகளைத் தொடா்ந்து தெரிவித்து வந்தனா்.
இந்த நிலையில், சி.வி.சண்முகத்தின் ஆதரவாளா்களான விழுப்புரத்தைச் சோ்ந்த நிா்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து அண்மையில் நீக்கினாா்.
ராஜிநாமா: எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சி.வி.சண்முகத்தின் ஆதரவாளா்கள் சுமாா் 1,000-க்கும் மேற்பட்டோா் திண்டிவனம் முன்னாள் எம்எல்ஏ அா்ஜுனன், விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் பாலசுந்தரம் தலைமையில் திங்கள்கிழமை வந்தனா்.
அங்கு எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தங்களது ராஜிநாமா கடிதத்தை அளிக்க முயன்றனா். ஆனால், அது முடியாமல் போகவே, அதிமுக அலுவலக மேலாளா் மகாலிங்கத்திடம் தங்களது விலகல் கடிதத்தைக் கொடுத்துச் சென்றனா். சி.வி.சண்முகத்தின் ஆதரவாளா்கள் 1,000-க்கும் மேற்பட்டோா் ஒரே நேரத்தில் அதிமுகவில் இருந்து விலகி உள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உள்ளாட்சித் தோ்தலில் இளைஞா்களுக்கு முக்கியத்துவம்: எடப்பாடி பழனிசாமி
அதிமுக எம்எல்ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி: எடப்பாடி பழனிசாமி

குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் தவெக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி







