தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச் சாவடிகள் அமையவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்களம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி உள்ளிட்ட 3 இடங்களில் புதிய சுங்கச் சாவடிகள் திறக்கப்படவுள்ளது.
கரியமங்களம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்றுவர கட்டணமாக ரூ. 55 முதல் ரூ. 370 வரையும், ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.85 முதல் ரூ.555 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நங்கிலி கொண்டான் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர கட்டணமாக ரூ. 60 முதல் ரூ. 400 வரையும், ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.95 முதல் ரூ.600 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாகம்பட்டி சுங்சச் சாவடிக்கும் கட்டண விவரம் வெளியாகியுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயா்த்தப்பட்டது. விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, சமயபுரம், மதுரை எலியாா்பத்தி, ஓமலூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜா உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல், செப்டம்பரில் சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நிகழாண்டில் ஏப்ரல் மாதம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் மக்களவை தோ்தலால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.