
சிதம்பரம்: சிதம்பரம் அருகே பு.முட்லூர் புறவழிச் சாலையில் காரும்,லாரியும் புதன்கிழமை நள்ளிரவு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்து கொர நாட்டு கருப்பூர் பகுதியைச் சேர்ந்த யாசர் ஹராபத் (40), மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா நக்கம்பாடி பள்ளிவாசல் தெருவையைச் சேர்ந்த முகமது அன்வர் (56), குத்தாலம் நக்கம்பாடி ஸ்ரீ கண்டபுரம் ஹாஜியார் தெரு பஷீர்அகமது மனைவி ஹாஜிதா பேகம் (62), திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த அசரப் அலி மனைவி சராபாத் நிஷா (30), இரண்டு வயது அப்னான் என்ற ஆண் குழந்தை ஆகியோர் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள்.
இவர்கள் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துபையைச் சேர்ந்த உறவினரை சென்று பார்த்துவிட்டு மயிலாடுதுறை நோக்கி வந்துகொண்டிருந்த போது புதன்கிழமை நள்ளிரவு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பி முட்லூர் அருகே ஆணையம்குப்பம் எனும் இடத்தில் இவர்களது ஸ்விப்ட் டிசையர் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரங்கிப்பேட்டை போலீசார், ஐந்து பேரின் உடல்களையும் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் தப்பிச் சென்று தலைமறைவாகினர்.
விபத்து குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.