ஜாபர் சாதிக் வழக்கு: இயக்குநர் அமீர் உள்ளிட்ட 12 மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்.
இயக்குநர் அமீர்.
இயக்குநர் அமீர்.
Published on
Updated on
1 min read

ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்பட 12 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாபா் சாதிக்-ஐ, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி கைது செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகை சம்பாதித்ததாகவும், தமிழக திரைத்துறையைச் சேர்ந்த முக்கியப் நபர்களுக்கும் அதில் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர் விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (என்சிபி) அழைப்பாணை அனுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து, புதுதில்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக அமீர் முன்னதாக ஆஜராகியிருந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் அமீர் உள்ளிட்ட 12 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குரைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளார். 302 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் ஜாபர் சாதிக், அவருடைய மனைவி மற்றும் சகோதரர், அமீர் உள்ளிட்ட12 பேர் மீதும், ஜாபர் சாதிக்கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக பணத்தை கையாண்ட புகாரின்பேரில், இயக்குநர் அமீரை 12-வது நபராக குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை சேர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com