ஜனநாயகமும் ஐரோப்பிய கோட்பாடே... ஆளுநர் கருத்துக்கு சிதம்பரம் எதிர்வினை!

ஜனநாயகமும் ஐரோப்பிய கோட்பாடே... ஆளுநர் கருத்துக்கு சிதம்பரம் எதிர்வினை!

மதச்சார்பின்மை இந்தியாவுக்கு அவசியமற்றதா? -ஆளுநருக்கு ப.சிதம்பரம் பதில்
Published on

இந்தியாவில் மதச்சார்பின்மை அவசியமற்றது என தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பேசியுள்ளார். மதச்சார்பின்மை ஐரோப்பிய கோட்பாடு, இது பாரதத்தின் கோட்பாடல்ல என அவர் குறிப்பிட்டிருப்பது விவாதப் பொருளாகியுள்ளது.

மதச்சார்பின்மை குறித்த தமிழக ஆளுநர் ஆர். என். ரவியின் கருத்துக்கு திமுக, கம்யூனிஸ்ட் உள்பட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆளுநர் கருத்துக்கு பதிலடியாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான பா. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “திருவள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு உடுத்திய தமிழக ஆளுநர் இப்போது, மதச்சார்பின்மை என்பது ஐரோப்பிய கோட்பாடு என்பதையும், அதற்கு இந்தியாவில் இடமில்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளார்.

அவர் கூறியிருப்பது சரியான தகவல் அல்ல, ஆனால், தான் கூறுவதை ‘சரி’ என்று அவர் நம்புகிறார்.

அப்படிப் பார்த்தோமாயின், கூட்டாட்சி என்பதும் ஐரோப்பிய கோட்பாடே. எனில், இந்தியாவில் கூட்டாட்சி முறைக்கு இடமில்லை என அறிவித்துவிடலாமா?

’ஒரு மனிதன், ஒரு ஓட்டு’ - இதுவும் ஐரோப்பிய கோட்பாடுதான். அப்படியிருக்கும்போது, சில நபர்களுக்கான ஓட்டுரிமையை ’இல்லை’ என தீர்மானித்துவிடலாமா?

ஜனநாயகம் என்பதும் ஐரோப்பிய கோட்பாடுதான். மாமன்னர்களும் அரசர்களும் ஆண்ட இந்திய மண் முன்பு அறிந்திடாத விஷயமே ஜனநாயகம். இந்த நிலையில், இந்த தேசத்தில் ஜனநாயகம் புதைக்கப்படுவதாக அறிவித்துவிடலாமா?

அரசமைப்பு நிறுவனங்கள், குறிப்பாக மாண்புமிக்க உயர்பொறுப்பு வகிப்போர் மௌனமாக இருக்க வேண்டிய தருணம்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ப. சிதம்பரம், ஆளுநர் ஆர். என். ரவியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com