வக்ஃப் மசோதா நிறைவேற்றியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது: தொல் திருமாவளவன்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என தெரிவித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
Published on
Updated on
2 min read

திருச்சி: வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என தெரிவித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மத்திய அரசின் வக்ஃப் மசோதாவை கண்டித்து வரும் 8 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், காட்டத்தூரில் உள்ள பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை நிறைவடைந்துள்ளது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள் என்று சொல்ல கூடிய அளவுக்கு வஃக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பாஜக அரசு கொண்டு நிறைவேற்றி உள்ளது. இது முஸ்லீம்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை. ஆளும் பாஜக அரசு தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இதனை அரங்கேற்றியுள்ளது.

வேறு எந்த மதத்தின் சொத்து விவகாரங்களில் தலையிடாத மத்திய அரசு வஃக்பு வாரியத்தில் அடாவடித்தனமாக தலையிடுகிறது. வக்ஃப் வாரியத்தில் முஸ்லீம் அல்லாத நபர்களை நியமிப்பதற்காக சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். இதற்கு வெளிப்படை தன்மை என பாஜகவினர் கூறுகின்றனர்.

பௌத்த மதத்தில் புத்த விகாரில் பௌத்தர் அல்லாதவர்களை நியமித்து இன்று வரை நடைமுறைப்படுத்த வருகின்றனர்.இதனை எதிர்த்து புத்த பிட்சுகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய அரசின் இந்த மத விரோத போக்கை விசிக வன்மையாக கண்டிக்கிறது.

தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வஃக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து வரும் 8 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.

மக்களவையில் மசோதாவுக்கு எதிராக 232 உறுப்பினர்களும், மாநிலங்கள் அவையில் 95 பேரும் வாக்களித்துள்ளோம். தமிழகத்தில் அதிமுகவும் எதிர்த்து வாக்களித்தது ஆறுதல் அளித்துள்ளது. எதிா்க்கட்சிகள் முன்மொழிந்த அனைத்துத் திருத்தங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டன. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு இதனை சாதித்திருக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக கூட்டணி கட்சிகளும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவை மீட்க வேண்டும்

இந்த நிலையில், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது.

பிரதமர் மோடி இலங்கை பயணம் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மோடி இது குறித்து பேசுவார் என எதிர்பார்க்கிறோம்.

அனைத்துக் கட்சி கூட்டம்

நீட் மசோதாவை மீண்டும் குடியரசுத் தலைவர் நிராகரித்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது.

இந்த சூழலில் 9 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தினை தமிழக முதல்வர் கூட்டியுள்ளார். அவரது முயற்சிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளோம். நீட் விவகாரத்தில் அரசியல் காரணங்களை முன்னிறுத்தாமல் அனைத்து கட்சிகளும் ஓரணியில் ஒன்று திரள வேண்டும்.

திமுக அரசு பதவியேற்ற காலத்தில் இருந்து நீட் எதிர்ப்பை முழு மனதோடு கடைபிடித்து வருகிறது. அவ்வாறு முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டார்கள் என கூறலாம்.

வேடிக்கையாக உள்ளது

விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் மத்திய ஆட்சியாளர்கள் தான். தமிழக ஆட்சியாளர்கள் மீது விமர்சனம் செய்வது வேடிக்கையாக உள்ளது.

நாட்டிலேயே தமிழகம் தான் பள்ளிக்கல்வித்துறையில் சிறந்து விளங்கி வருகிறது. மரத்தடி வகுப்புகள் இன்றும் நடக்குமானால் அதற்கு உடனடியாக உரிய தீர்வு காணப்பட வேண்டும். பள்ளி வகுப்பறை எண்ணிக்கைகளை பெருக்க வேண்டும்.

பெரிய சவுக்கடி

வஃக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து பிகாரில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி உள்ளனர். இது கூட்டணி கட்சிகளுக்கு பெரிய சவுக்கடி என திருமாவளவன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com