பாஜக பின்பற்றுவது இந்து மதமல்ல: ராகுல் கண்டனம்!

பாஜகவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதைப் பற்றி...
பாஜக நிர்வாகி ஞானதேவ் அஹுஜா, ராகுல் காந்தி, திக்காராம் ஜுல்லி
பாஜக நிர்வாகி ஞானதேவ் அஹுஜா, ராகுல் காந்தி, திக்காராம் ஜுல்லி
Published on
Updated on
1 min read

ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரின் வருகைக்கு பின்பு ராமர் கோயிலில் கங்கை நீர் ஊற்றி கழுவப்பட்ட விவகாரத்திற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான திக்காராம் ஜுல்லி கடந்த ஏப்.7 ஆம் தேதி ராம நவமியை முன்னிட்டு அல்வாரிலுள்ள ராமர் கோயிலில் வழிபாடு செய்துள்ளார்.

திக்கா ராம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் வழிபாடு செய்து முடித்த பின்னர் பாஜக நிர்வாகிகள் அந்தக் கோயிலைக் கழுவி சுத்தம் செய்தததுடன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான ஞானதேவ் அஹுஜா என்பவர் கங்கை நீர் தெளித்து மீண்டும் புனிதப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:

’’பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நபர் கோயிலினுள் நுழைய அனுமதி வழங்கப்படுவதில்லை. அப்படி அவர் அனுமதிக்கப்பட்டால் அந்தக் கோயில் தண்ணீர் ஊற்றி கழுவப்படுகிறது. இது நமது மதமில்லை; நாம் நம்மை இந்துக்கள் எனக் கூறிக்கொள்கிறோம்; ஆனால், நமது மதத்தில் எல்லா மனிதர்களும் மரியாதையோடு நடத்தப்படுவார்கள். பாஜக பின்பற்றுவது நமது மதமில்லை, இது அவர்களது தலைவர்களின் மனதில் ஒளிந்துள்ள தீண்டாமையின் விளைவு’’ என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து வெளியான விடியோ நாடு முழுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன் விமர்சனங்களையும் பெற்று வந்தது. அந்த விடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி, இது பாஜகவின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான நிலைப்பாடின் மற்றொரு சான்று எனவும் பாஜக தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட மக்களை அவமானப்படுத்துவதுடன் அரசியலமைப்பை தாக்கி வருகின்றது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஞானதேவ் அஹூஜா கூறுகையில், திக்காராம் ஜுல்லி சனாதான தர்மம் மற்றும் ஹிந்துத்துவத்திற்கு எதிரானவர் என்றும் அவர் சென்ற கோயில்களுக்குச் சென்று கங்கை நீர் தெளித்து தனது கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் அவர் கூறியது மேலும் சர்ச்சையானது.

இந்தச் சம்பவத்திற்கு ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:குடியரசுத் தலைவருக்கு ஸ்லோவாக்கியா அளித்த பரிசு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com