
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூரின் பிஷ்னுப்பூர், காங்போக்பி, கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஏப்.11) மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு நடவடிக்கைகளின் மூலம் 6 கிளர்ச்சியாளர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிஷ்னுப்பூர் மாவட்டத்தின் லெய்மாரம் மாமாங் லெய்காய் என்ற பகுதியில் பணப்பறிப்பில் ஈடுபட்ட காங்லெய் யாவோல் கன்னா லப் என்ற கிளர்ச்சிப்படையைச் சேர்ந்த பாக்பி தேவி (வயது 37) என்ற பெண் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், கிழக்கு இம்பாலின் மந்திரிபுக்ரி பகுதியில் ஆயுத கடத்தல் மற்றும் பணப்பறிப்பில் ஈடுபட்ட தடைசெய்யப்பட்ட காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹுய்த்ரோம் சுந்தர் சிங் (39) மற்றும் அதே அமைப்பைச் சேர்ந்த மற்றொரு நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கிழக்கு இம்பாலின் லாம்லாங் சந்தைப் பகுதியில் மொய்ராங்தெம் சுரன்ஜாய் மெதேய் (31) என்பவர் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையினால் பிடிப்பட்டுள்ளார்.
இதனிடையே, மேற்கு இம்பாலின் பாயெங் சபால் லெய்கய் என்ற பகுதியில் அங்கோம் சுர்ஜித் சிங் என்ற நபரும் சூரசந்திரப்பூர் நிவாரண முகாமில் தங்கியிருந்து காங்போக்பி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஹென்சன்பெய்க் வைபெய் (23) என்ற நபரும் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் மணிப்பூரில் குடியரசுத் தலைவரின் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் தடைசெய்யப்பட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.