பட்ஜெட் 2025: கரியால் வரையப்பட்ட நிதியமைச்சரின் ஓவியம்!
2025-2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று (பிப்.1) நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இத்துடன், தொடர்ந்த எட்டாவது முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹாவைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் ஒருவர் இந்தாண்டின் (2025-2026) மத்திய பட்ஜெட்டை குறிக்கும் விதமாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 8 அடி உயர உருவப்படத்தை க்ராஃபைட் கரியைக் கொண்டு வரைந்துள்ளார்.
இதுகுறித்து, அந்த ஓவியத்தை வரைந்த கலைஞர் ஜுஹைப் கான் கூறியதாவது, இந்த ஓவியத்தின் மூலமாக 2025-2026 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டின் மீதான தனது எதிர்பார்ப்பை வெளிக்காட்டியுள்ளதாகவும், இந்த பட்ஜெட்டினால் இந்திய ரூபாயின் மதிப்பு பலமடைந்து, நாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடும் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: பட்ஜெட் தாக்கல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
இதேப்போல், மத்திய பட்ஜெட்டை குறிக்கும் விதமாக ஒடிசாவின் பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் எனும் கலைஞர் 4 டன் அளவிலான மணலைக் கொண்டு ’வெல்கம் யூனியன் பட்ஜெட்’ எனும் வாக்கியங்களுடன் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, நேற்று (ஜன.31) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை, அடுத்த 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என்று கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.