/

'அதிமுக ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும்' - ஓபிஎஸ்

அதிமுக ஒன்றிணைய வேண்டுமானால் ஈகோவை கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

News image
Updated On :19 பிப்ரவரி 2025, 7:20 am

DIN

அதிமுக ஒன்றிணைய வேண்டுமானால் ஈகோவைக் கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"எதையும் எதிர்பார்க்காமல் அதிமுகவுக்கு உழைக்கும் உன்னதத் தொண்டன்தான் செங்கோட்டையன். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் விரும்புகின்றனர்.

கட்சி ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். கட்சியின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பின்னால்தான் இருக்கிறார்கள்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஒருங்கிணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ரகசியத்தை வெளியில் சொல்ல முடியாது. அதனைச் சொன்னால் கட்சிக்கு தடையாக இருக்கும்.

ஆர்.பி. உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை. அவர் பேசும் மொழி சரியில்லை. அவர் பேசுவதை பேசட்டும். மக்கள் பார்த்துக்கொள்வார்கள்" என்று கூறினார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதில் இருந்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தரப்பினர், கட்சி குறித்த பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர்.

நேற்று செய்தியாளர்களுடன் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓபிஎஸ் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.