
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச் சண்டை வீரர் தனுஷ்(24) மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தடுக்கச் சென்ற அவரது நண்பர் படுகாயம் அடைந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி கிருஷ்ணம்மாள் பேட்டை பகுதியை சேர்ந்தவர் தனுஷ். இவர் பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் பெற்றுள்ளார். காவல்துறை தேர்வுக்கும் தொடர்ந்து தயார படுத்திக் கொண்டு வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், அவரது பகுதியில் வசித்து வரும் இளைஞர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனுஷ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவு வீட்டின் அருகே நண்பர்களுடன் தனுஷ் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் தனுஷை வெட்டி படுகொலை செய்துள்ளது. தடுக்க வந்த அவரது நண்பர் அருண் என்பவரையும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இந்த சம்பவத்தில் உடல் மற்றும் தலையில் வெட்டப்பட்ட தனுஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார் தனுஷ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெட்டுக்காயம் அடைந்த அருண் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு எதுவும் காரணங்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
குத்துச்சண்டை வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக மோகன், செந்தில், டேவிட், விஷால் உள்ளிட்ட 9 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.