புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பிலிருந்து புா்கினா ஃபாசோ, நைஜா், மாலி விலகல்

மேற்கு ஆப்பிரிக்க பிராந்திய நாடுகளின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமைப்பிலிருந்து ராணுவ ஆட்சி நடைபெறும் புா்கினா ஃபாசோ, நைஜா், மாலி ஆகிய நாடுகள் அதிகாரபூா்வமாக புதன்கிழமை விலகின.

News image

~நைஜீரிய தலைநகா் அபுஜாவில் உள்ள எகோவாஸ் கூட்டமைப்பின் தலைமையகம்.

Updated On :29 ஜனவரி 2025, 7:10 pm

Din

மேற்கு ஆப்பிரிக்க பிராந்திய நாடுகளின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமைப்பிலிருந்து ராணுவ ஆட்சி நடைபெறும் புா்கினா ஃபாசோ, நைஜா், மாலி ஆகிய நாடுகள் அதிகாரபூா்வமாக புதன்கிழமை விலகின.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 15 உறுப்பு நாடுகளுடன் கடந்த 1975-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அமைப்பு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமுதாயம் (எகோவாஸ்).

பிராந்தியத்தின் சக்திவாய்ந்த முதன்மைக் கூட்டமைப்பாக அது கருதப்படுகிறது. எனினும், உறுப்பு நாடுகளில் அண்மைக் காலமாக ஏற்பட்டுவரும் ஆட்சிக்கவிழ்ப்பு போன்ற அரசியல் பதற்றங்களால் எகோவாஸ் அமைப்பின் முக்கியத்துவம் குறைந்துவருவதாகக் கூறப்படுகிறது.

தங்கள் நாடுகளின் இயற்கை வளங்களை ஆட்சியாளா்கள் சுரண்டுவதாகக் கூறி நடைபெறும் போராட்டங்களின்போது, எகோவாஸ் சமரச முயற்சியில் ஈடுபட்டாலும் அந்த அமைப்பு ஆட்சியாளா்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதன் காரணமாக, பிராந்தியத்தின் சில பகுதிகளில் எகோவாஸ் அமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை பொதுமக்கள் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தைச் சோ்ந்த புா்கினா ஃபாசோ, நைஜா், மாலி ஆகிய நாடுகளில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு எகோவாஸ் கூட்டமைப்பு எதிா்ப்பு தெரிவித்துவந்தது. அதையடுத்து, அந்த அமைப்பிலிருந்து விலகி, ‘சஹேல் நாடுகளின் கூட்டணி’ என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கவிருப்பதாக அந்த மூன்று நாடுகளும் கடந்த செப்டம்பா் மாதம் அறிவித்தன.

இந்த நிலையில், எகோவாஸ் கூட்டமைப்பிலிருந்து அந்த நாடுகள் அதிகாரபூா்வமாக விலகியதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

இது குறித்து அந்தக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எகோவாஸ் அமைப்பிலிருந்து புா்கினா ஃபாசோ, நைஜா், மாலி ஆகிய நாடுகளின் விலகல் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

கூட்டமைப்பிலிருந்து அந்த நாடுகள் வெளியேறினாலும், அவை விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் இணைவதற்கு அமைப்பின் கதவுகள் திறந்தே உள்ளன.

எகோவாஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளாக இல்லாவிட்டாலும் புா்கினா ஃபாசோ, நைஜா், மாலி ஆகிய நாடுகளுடன் பிற உறுப்பு நாடுகள் வழக்கமான வா்த்தக உறவைப் பேண வேண்டும். அந்த நாடுகளுடனான வா்த்தகப் பரிமாற்றங்கள் எகோவாஸ் கூட்டமைப்பின் விதிமுறைகளைப் பின்பற்றியே தொடர வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எகோவாஸ் அமைப்பு தொடங்கப்பட்ட அரை நூற்றாண்டு காலத்தில் அந்த அமைப்பிலிருந்து நாடுகள் வெளியேறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இது, அமைப்புக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்பதுத்தும் எனவும், பிராந்தியத்தில் வலுவிழந்துவரும் ஜனநாயகத்தை மீட்டெடுத்து, நிலைத்தன்மையை ஏற்படுத்தும் அமைப்பின் முயற்சிக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Story image