நம் முன்னெடுப்பு நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதுவெறும் கூட்டம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கக் கூடிய ஒரு இயக்கத்தின் தொடக்கம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on
Updated on
2 min read

சென்னை: இதுவெறும் கூட்டம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கக் கூடிய ஒரு இயக்கத்தின் தொடக்கம் என தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டுக் குழு கூட்டத்திற்கு தலைவர்களை வரவேற்று சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இது இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என தெரிவித்துள்ளார்.

அதில், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டுக் குழு கூட்டத்தில் எங்களுடன் இணையும் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களை நான் மனதார வரவேற்கிறேன்.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தெலங்கானா, ஒடிசா, மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பாதிக்கும்.

அப்படி நடந்தால், நாட்டின் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது. ஜனநாயகத்தின் மதிப்பும் இருக்காது. நாடாளுமன்றத்தில் நம் குரல் நசுக்கப்படும். நம் உரிமைகளை நிலைநாட்ட முடியாது.

மக்கள்தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு தண்டனை கொடுக்கக்கூடாது.

இது உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்னை மட்டும் கிடையாது; நம் மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்னை. அதனால் தான் தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு தொடா்பாக தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் மார்ச் 5 ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தினோம். இதில், பாஜக தவிர, திமுக, அதிமுக, திராவிடா் கழகம், காங்கிரஸ், பாமக, தேமுதிக, விசிக, இடதுசாரி கட்சிகள், நடிகா் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், உலகத் தமிழா் பேரமைப்பு உள்பட தமிழ்நாட்டின் பதிவுசெய்யப்பட்ட மொத்தம் 59 கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நியாயமான தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஓரணியில் நின்றது ஒரு மைல்கல் தருணமாகும். இந்த மிகப்பெரிய ஒருமித்த கருத்து, தமிழ்நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது.

அதில், இந்த தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்பட உள்ள மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

இந்த வரலாற்று ஒற்றுமையை கட்டியெழுப்ப, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதல்வர்களுக்கும், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இருக்கின்ற அந்த மாநிலங்களைச் சார்ந்த அனைத்து கட்சிகளின் தலைமைக்கும் நான் கடிதம் எழுதினேன்.

அந்த கடிதங்களை ஒரு அமைச்சர் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அடங்கிய குழு, அவர்களை நேரில் சந்தித்து நமது கூட்டுத் தீர்மானத்தை கொடுத்து விளக்கம் அளித்தார்கள். அனைத்து மாநில முதல்வர்களிடமும் நானே தொலைபேசியில் பேசினேன்.

இதை தொடர்ந்து, சிலர் நேரடியாக வருவதாகவும், சிலர் ஏற்கெனவே ஒத்துக்கொண்ட நிகழ்ச்சிகள் காரணமாக தங்களுடைய பிரதிநிதிகளை அனுப்புவதாகவும் கூறினார்கள்.

தமிழ்நாட்டில் முன்முயற்சியாகத் தொடங்கிய இந்த இயக்கம் தற்போது ஒரு தேசிய இயக்கமாக மாறியுள்ளது, நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் நியாயமான பிரதிநிதித்துவத்தைக் கோர கைகோர்த்துள்ளன.

அதனால்தான் பிற மாநிலங்களை ஒருங்கிணைக்க, அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் முதற்கட்ட கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாட்டில் சனிக்கிழமை(மார்ச் 22) சென்னையில் நடக்க இருக்கிறது. இப்போது எதற்கு இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டுமென்று சிலர் கேட்கிறார்கள் …

தொகுதி மறுசீரமைப்பால் நம் தமிழ்நாடும் – நாம் அழைத்திருக்கின்ற மாநிலங்களும் பாதிக்கப்பட்டால் - இந்திய நாட்டில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது. ஜனநாயகத்திற்கான மதிப்பே இருக்காது. நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல்கள் நசுக்கப்படும். நம்முடைய உரிமைகளை நிலைநாட்ட முடியாது. இது இந்த மாநிலங்களை அவமதிக்கின்ற செயல்.

எனவே, மக்கள்தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தண்டனை கொடுத்துவிட கூடாது.

அதனால் தான், தமிழ்நாட்டில் இருக்கின்ற பெரும்பாலான கட்சிகளின் ஒருங்கிணைந்த சிந்தனைப்படி, மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்கின்ற இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் நியாயமான பிரதிநிதித்துவத்தைக் கோர கைகோர்த்துள்ளன. இது நமது கூட்டுப் பயணத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட தருணம். இது நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும். ஒரு இயக்கத்தின் தொடக்கமாகும். இதுவெறும் கூட்டம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கக் கூடிய ஒரு இயக்கத்தின் தொடக்கம். நம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றியடையும். இது இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்! என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com