
புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு 51,327 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய அவை நிகழ்வில் கேள்வி நேரத்தில், 'தமிழகத்தில் ரேஷன் கடைகளில் எத்தனை புகார்கள் வந்திருக்கின்றன? அதேபோல எத்தனை ரேஷன் அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன?' என எம்எல்ஏ ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி,
"தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்படும், ஏற்கெனவே ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் மூலமாகவும் தொலைபேசி புகார் எண்ணிலும் புகார் அளிக்கலாம்.
திமுக ஆட்சியில் புதிதாக 3,000- க்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திமுக ஆட்சி அமைந்தவுடன் 18,09,677 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தமாக 2 கோடியே 25 லட்சத்து 59 ஆயிரத்து 224 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன.
51,327 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு புதிய அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் புதிய குடும்ப அட்டை பெற 1,67,795 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. அதுவும் விரைவாக பரிசீலனை செய்து வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.