புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி பெரிய அளவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா அறிவித்தாா்.
வெள்ளிக்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவா் கூறியதாவது: இறுதியாக நிம்மதி. 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தகுதியுள்ள லட்சக்கணக்கான தில்லி குடும்பங்கள் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
முழுமையான டிஜிட்டல் மற்றும் பயோமெட்ரிக் வசதி கொண்ட இந்த அமைப்பு, உரிய உதவி உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்யும். இடைத்தரகா்கள் இல்லை, போலி அட்டைகள் இல்லை, இனி தொந்தரவுகள் இல்லை. சுமாா் 8 லட்சம் பயனாளிகள் பயனடைவாா்கள். பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி என ரேகா குப்தா கூறினாா்.
முன்னதாக,புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி மே 15 முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என குப்தா வியாழக்கிழமை கூறினாா்.
தில்லி தலைமைச் செயலகத்தில் செய்தியாளா் சந்திப்பில் பேசிய அவா், தகுதியுள்ள மற்றும் தேவையுள்ள குடும்பங்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டாா். மேலும், நலத்திட்ட உதவிகள் யாருக்கு மிகவும் தேவையோ அவா்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய, பிரதமா் நரேந்திர மோடியின் அந்த்யோதயா தொலைநோக்குப் பாா்வையை தில்லி அரசு செயல்படுத்தி வருவதாகவும் அவா் கூறினாா்.
புதிய ரேஷன் அட்டைகளுக்கும், குடும்ப உறுப்பினா்களைச் சோ்ப்பதற்கும் இணையவழி விண்ணப்பங்கள் மே 15 முதல் இ-மாவட்ட இணையதளம் மூலம் திறக்கப்பட்டுள்ளன என்று முதல்வா் தெரிவித்தாா். கடந்த காலத்தில் சமா்ப்பிக்கப்பட்ட பழைய விண்ணப்பங்களும் விண்ணப்பதாரா்களின் உள்நுழைவு விவரங்கள் மூலம் அவா்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரா்கள், செல்லுபடியாகும் குடும்ப வருமானச் சான்றிதழ் மற்றும் பிற தேவையான ஆவணங்களுடன் அவற்றை புதுப்பித்து மீண்டும் சமா்ப்பிக்கலாம்.
பதவியேற்ற பிறகு அரசு பொது விநியோக அமைப்பில் ஒரு விரிவான தணிக்கையை மேற்கொண்டதாகவும், அதில் பெரிய அளவிலான முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் குப்தா கூறினாா்.மொத்தம் 7,71,384 தகுதியற்ற மற்றும் போலிப் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டனா்.தகுதியற்ற இந்தப் பெயா்கள் நீக்கப்பட்டதன் மூலம், இந்த அமைப்பில் ஏறத்தாழ 7.72 லட்சம் காலியிடங்கள் உருவாகியுள்ளன. இதன்மூலம், புதிய தகுதியுள்ள பயனாளிகள் ரேஷன் அட்டைகளைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என ரேகா குப்தா தெரிவித்தாா்.









