
தூத்துக்குடி: தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில், படகு எரிந்து சேதமடைந்தது.
தூத்துக்குடி இனிகோ நகரைச் சேர்ந்தவர் சேசுராஜ். மீனவரான இவர், அவருக்கு சொந்தமான பைபர் படகு மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இனிகோ நகர் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த பைபர் படகிற்கு புதன்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த ஜேசுராஜ் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் படகில் இருந்த இயந்திரம் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.
சேதமடைந்த படகின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து தென்பாகம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜேசுராஜிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராபின்சன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இதன் காரணமாக ராபின்சன் தரப்பினர் தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.