
அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் பகுதியாகவே இருக்கும் என்றும், அந்த மாநிலத்தில் உள்ள சில இடங்களுக்குச் சீனா மறுபெயரிடுவதால் உண்மை நிலை மாறாது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் தெற்கு பகுதிதான் அருணாசல பிரதேசம் என்று கூறி, இந்தியாவுக்குச் சொந்தமான அந்த மாநிலத்துக்கு சீனா பல காலமாக உரிமை கோரி வருகிறது.
இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் உள்ள சில இடங்களுக்கு சீனா மறுபெயரிட்டது. அந்த இடங்களுக்கு சீன மொழியில் பெயரிடப்பட்ட நிலையில், அதை இந்தியா நிராகரித்துள்ளது.
இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு பெயா் வைக்கும் வீணான, முட்டாள்தனமான முயற்சிகளை சீனா தொடா்ந்து வருகிறது. இதை மத்திய அரசு கவனத்தில் கொண்டது.
அருணாசல பிரதேசத்தை பொருத்தவரை, இந்தியாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது. எனவே அந்த மாநிலத்துக்குச் சீனா மறுபெயரிட்டதை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது. இதுபோல பெயரிடுவதால் அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவுக்குச் சொந்தமானதுதான் என்ற மறுக்க முடியாத உண்மையை மாற்றிவிட முடியாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே சீன அரசு ஊடகங்களான ‘க்ளோபல் டைம்ஸ்’, ‘ஷின்ஹுவா’ ஆகியவற்றின் ‘எக்ஸ்’ தள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டன. அருணாசல பிரதேசத்தின் சில இடங்களுக்கு சீனா மறுபெயரிட்ட நிலையில், அந்தக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.