
ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்த மனைவி செய்த கள்ளக்காதல் துரோகத்தை தாங்க முடியாத கணவர் மாமியார், சித்தப்பா, சித்தி ஆகிய 3 பேரையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், கொடைக்கல் அடுத்த புதுகுடியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு(30). விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (26) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில், பாலுவின் சித்தப்பா மகனான கொடைக்கல் பகுதியைச் சேர்ந்த விஜய்(26) என்பவருக்கும் புவனேஸ்வரிக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த தவறான பழக்கத்தால் கணவர் பாலுவுடன் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு, புவனேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த முறை நடந்த பிரச்னையில் இருவரும் பிரிந்த நிலையில் கடந்த 1 ஆண்டாக புவனேஸ்வரி, வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இருவரும் பிரிந்து வசித்து வந்த நிலையில், தற்போது புவனேஸ்வரி 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த பாலு, புதன்கிழமை இரவு lதனது மனைவி புவனேஸ்வரியை கொல்ல திட்டமிட்டு, கீழ்புதுப்பேட்டை பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். கணவர் குடிபோதையில் வருவதை பார்த்த புவனேஸ்வரி ஓடி ஒளிந்து கொண்டதால், ஆத்திரத்தில் தனது மாமியார் பாரதியை வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் சித்தப்பா மகன் விஜயை கொலை செய்வதற்காக கொடைக்கல் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு விஜய் வீட்டில் இல்லாத காரணத்தினால் அவரது தந்தையான அண்ணாமலை(52) மற்றும் அவரது தாயாரான ராஜேஸ்வரி(45) ஆகியோரை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர், வாலாஜா காவல் நிலையத்தில் பாலு சரணடைந்தார்.
காவல் நிலையத்தில் பாலு கொடுத்த தகவலின் பெயரில் வாலாஜா போலீசார் கீழ்புதுப்பேட்டை பகுதியில் உள்ள அவரது மாமியார் பாரதி சடலத்தையும் கொடைக்கல்லில் சித்தப்பா அண்ணாமலை மற்றும் சித்தி ராஜேஸ்வரி ஆகியோர் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.