தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வெள்ளத்தில் மிதக்கும் கேரளம்: விரைந்தது தேசிய பேரிடர் மீட்புக் குழு!

கேரளத்தில் நீடித்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :31 மே 2025, 5:18 am

கேரளத்தில் நீடித்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சூறைக் காற்றால் ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளன. பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக விரைந்தனர்.

கேரளத்தில் வழக்கத்தைவிட முன்கூட்டியே கடந்த மே 24-ஆம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை நீடித்து வருகிறது.

பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எா்ணாகுளம், இடுக்கி, திருச்சூா், கண்ணூா், காசா்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், பிற மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சூா், கண்ணூா், காசா்கோடில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கியில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. பல மணிநேரம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

எா்ணாகுளம் மாவட்டத்தில் சூறைக்காற்றால் மரம் விழுந்ததில் 85 வயது மூதாட்டி உயிரிழந்தாா். மூவாட்டுப்புழா ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்வதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்லத்தில் மரங்கள் விழுந்ததில் வீடுகள்-வாகனங்கள் சேதமடைந்தன. சிலா் காயமடைந்தனா்.

கேரள கடல் பகுதியில் 3 முதல் 4 மீட்டா் உயரம் வரை அலைகள் எழும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக கேரளம் விரைந்தனர்.

கேரளம் பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டு கொண்டதின் பேரில் நவீன மீட்பு உபகரணங்களுடன் குழுவுக்கு 30 பேர் வீதம் 4 குழுக்களாக 120 பேர் சாலை மார்க்கமாக சனிக்கிழமை காலை கேரளம் விரைந்துள்ளனர்.

இவர்கள் அங்கிருந்து பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு பகுதிகளுக்கு செல்கின்றனர்.

தற்போது 65 நிவாரண முகாம்களில் 1,800-க்கும் மேற்பட்டோா் தஞ்சமடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.